மியான்மரின் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டபோது இராணுவத்தினரால் சுடப்பட்டு கடந்த 10 நாட்களாக உயிருக்குப் போராடி வந்த இளம் பெண் இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இதனை உயிரிழந்த பெண்ணின் சகோதரர் இன்று ஊடகங்களிடம் உறுதி செய்தார்.
கடந்த பெப்ரவரி -01 முதல் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக இடம்பெற்று வரும் போராட்டங்களில் ஏற்பட்ட முதல் மரணமாக இது பதிவாகியுள்ளது.
அத்துடன், இந்தப் பெண்ணின் மரணம் ஆர்ப்பாட்டக்காரர்களை மேலும் ஆத்திரமடையச் செய்துள்ளது. மியான்மர் இராணுவத்துக்கு எதிரான வலுவான சர்வதேச எதிர்பலைகளுக்கும் இது வித்திட்டுள்ளது.
20 வயதான மியா த்வேட் த்வேட் கைங் (Mya Thwate Thwate Khaing) என்ற 20 வயதான இந்த யுவதி தலைநகர் நய்பிடாவில் கடந்த 9-ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கியால் சுடப்பட்டு படுகாயமடைந்தார்.
கடந்த 10 நாட்களாக உயிர்காப்புக் கருவிகளின் உதவியுடன் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. எனினும் இன்று அவரது உயிர் பிரிந்தது.
மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை இரண்டாவது வாரமாகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க பொலிஸார் கண்ணீா்ப் புகைக் குண்டு பிரயோகம், நீர்த் தாரை பிரயோகம், ரப்பர் குண்டுத் தாக்குல்களை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை, ஆா்பாட்டக்காரர்களின் தாக்குதலுக்கு இலக்காகி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்ததாக இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.